நெல்லித்தோப்பில் நாராயணசாமி பணப்பட்டுவாடா - 'அம்மா ஆணைப்படி' தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
டெல்லி: புதுச்சேரியில் தேர்தல் விதிமீறல்கள் நடப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. நவநீதகிருஷ்ணன் தலைமையில் அதிமுக எம்பிக்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முதல்வர் நாராயணசாமியும், அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் களத்தில் உள்ளனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி பணப்பட்டுவாடா செய்வதாகவும், புதுச்சேரியில் தேர்தல் விதிமீறல்கள் நடப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. நவநீதகிருஷ்ணன் எம். பி தலைமையில் அதிமுக எம்பிக்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இவர்களுடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன் எம்.பி, நெல்லித்தோப்பில் நாராயணசாமி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வருகிறார். முதல்வர் நாற்காலியை விட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் நிதியில் இருந்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு சலுகைகள் செய்து வருகிறார். இது தேர்தல் விதி மீறலாகும். இது குறித்து அம்மாவின் ஆணைக்கிணங்க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார் நவநீதகிருஷ்ணன் எம்.பி.
நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க அதிமுக முயல்வதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் பாண்டிச்சேரி முதல்வருமான நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி, சுழல் விளக்கு வாகனத்தில் வந்த தமிழக அமைச்சர்கள், நெல்லித்தோப்பு தொகுதியின் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்ததாக நாராயணசாமி குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் பணி என்ற போர்வையில் தமிழகத்தில் இருந்து அதிமுகவினரை, நெல்லித்தோப்பு தொகுதியில் இறக்கி விட திட்டமிட்டிருப்பதாகவும் புகார் கூறிய நாராயணசாமி, தேர்தலின்போது கலவரத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வெண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
திங்கள்கிழமை ஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத்தை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர் அந்த மனுவில், நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சி அமைதியாகம், நேர்மையாகவும் நடத்த விரும்புகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமியும், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் இணைந்து அமைதியான முறையில் வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்திசேகர் தமிழகத்தில் இருந்து அடியாட்களை கொண்டுவந்து தொகுதி முழுவதும் மக்களிடத்திலே மக்களை மிரட்டி வாக்கு சேகரிக்கின்றார். எனவே இவ்விஷயத்தில் ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, மக்கள் அட்சமின்றி வாக்களிப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.