4 நாள் டெல்லி முகாம்.. 35 மணி நேரம் விசாரணை.. கடைசியில் கைது.. தினகரனின் திக், திக் நிமிடங்கள்
லஞ்சப் பகாரில் கைது செய்யப்பட்டுள்ள டிடி வதினகரன் மீது ஜாமினில் வெளிவரமுடியாத 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் 35 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைப் பெற புரோக்கர் சுகேஷ் சந்தர் மூலம் பேரம் பேசியதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்பட்ட டிடிவி தினகரன் கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக டெல்லி சாணக்யபுரி காவல்நிலையத்தில் ஆஜரானார். முதல் நாளான சனிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட போது தனக்கு சுகேஷ் சந்தர் யாரென்றே தெரியாது என்று தினகரன் கூறியுள்ளார். இதனையடுத்து தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் அளித்த தகவல்களின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமை 9 மணி நேரமும், திங்கட்கிழமை 13 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. புரோக்கர் சுகேஷ் யாரென்றே தெரியாது என்றும் கேட்கப்பட்ட அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார் தினகரன். கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான தினகரனிடம் சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டதோடு, ஏப்ரல் 16ம் தேதி சுகேஷிடம் 20 மணி நேரம் பேசியதற்கான தொலைபேசி உரையாடலையும் காட்டி விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
தினகரன் கைது செய்யப்படுவார் என்று சனிக்கிழமை முதலே செய்திகள் வெளியான நிலையில் 35 மணி நேர விசாரணைக்குப் பிறகு தற்போது தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ள தினகரன், நாளை நண்பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், 10 கோடி ரூபாய் பணம் கைமாறியதாகவும், அவற்றி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மட்டுமே சிக்கியதால் எஞ்சிய பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாலேயே விசாரணை பல மணி நேரம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
லஞ்சப் புகார் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது ஜாமினில் வெளிவர முடியாத 4 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் கண்டிப்பாக சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் தினகரன் உள்ளார். மேலும் இது போன்ற வழக்கு இது வரை நடைபெற்றதில்லை என்பதால் தினகரனுக்கு அதிகபட்ச சிறைதண்டனை கிடைக்கும் என்றும் சட்ட வல்லுநுர்கள் கருதுகின்றனர்.











Click it and Unblock the Notifications