டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை... வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்களை தானே முன்வந்து நீதிமன்றம் தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுன் முதல் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தன.

இருப்பினும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வழக்கறிஞர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதற்காக தற்போது வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று கூறினார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-ந்தேதி மீண்டும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications