ரூ.3 கோடி ஹெராயினை வயிற்றில் வைத்து டெல்லிக்கு கடத்தி வந்த ஆப்கானிஸ்தானியர் கைது
டெல்லி: ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து காபூல் நகரில் இருந்து டெல்லிக்கு கடத்தி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் நூர் அமீர்(50). தென்கிழக்கு டெல்லியில் உள்ள லஜ்பட் நகரில் தங்கியிருக்கும் அவர் கஸ்தூர்பா நிகேதன் அருகே புதன்கிழமை மயங்கிக் கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து நூரை மயக்கம் தெளிய வைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலில் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த அவர் பின்பு சம்மதித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவர் தனக்கு வயிறு வலிப்பதாகவும், மலம் கழிக்க உதவும் மாத்திரை மட்டும் கொடுத்தால் போதும் என திரும்பத் திரும்ப கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன்பு ஒரு போலீஸ்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு நூருக்கு ஸ்கேன் எடுக்குமாறு டாக்டரிடம் தெரிவித்தார்.
ஸ்கேன் செய்தபோது நூரின் வயிற்றில் 95 ஹெராயின் போதைப் பொருள் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. அந்த ஹெராயின் மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
இதையடுத்து போலீசார் நூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காபூல் நகரில் இருந்து டெல்லிக்கு அந்த மாத்திரைகளை கடத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் சோதனையில் யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க அவர் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி வந்துள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதேபோன்று ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி டெல்லி வந்தார். வயிற்றில் இருந்த மாத்திரைகளில் ஒன்று வெடித்ததால் அவர் பலியானார். இதையடுத்து செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தான் அவரது வயிற்றில் ஏராளமான ஹெராயின் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications