ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி
ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீர், நொய்டாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நொய்டா: ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் உணரப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்
ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இதே போல நொய்டாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
காலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதம், பொருட்சேதம் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பாத்கீஸ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர், நொய்டாவில் உணரப்பட்டுள்ளது.