மணிப்பூரில் 2 மாதங்களுக்குப் பிறகு.. பிராட்பேண்ட் இணையதள சேவை.. என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
இம்பால்: மணிப்பூரில் 2 மாதங்களுக்குப் பிறகு, நிபந்தனைகளுடன் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சேவையைப் பெற, கணினி IP முகவரிக்கு தினசரி பாஸ்வேர்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்த வன்முறை காரணமாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இணையதள சேவைக்கு தடை விதித்தது.இதனால் பொதுமக்களுக்கு பிராட்பேண்ட், செல்போன் இணைய சேவைகள் அங்கு ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் வன்முறை குறைத்து மணிப்பூரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.இதையடுத்த மணிப்பூரில் பிராட்பேண்ட் இணையதள சேவைகளை மட்டும் தற்போதைக்கு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் பிராட்பேண்ட் இணையதள சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் பிராட்பேண்ட் இணைய சேவையை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தலாம்.
இது தடிவிரை இணைய சேவை இருந்தால் மட்டுமே பணிபுரிய முடியும் என்று உள்ள நிறுவனங்களும் பிராட்பேண்ட் இணையதள சேவையை பயன்படுத்த முடியும்.

தற்போது உள்ள சூழலில் பிராட்பேண்ட் இணைய சேவைவைய எளிதாக பெற முடியாது. ஒருவர் மணிப்பூர் இணைய சேவையைப் பெற வேண்டும் என்றால் அதற்கு கட்டுப்பாடுகளும் உள்ளன. தினமும் கம்ப்யூட்டரின் IP முகவரிக்கு ID மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும்.
ஆனால் கம்ப்யூட்டரில் உள்ள ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தி இணைய சேவையை பிற செயலிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறி பிற செயலிகளுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநில ஆளுநர் வெளியிட்ட உத்தரவுகளின்படி, மொபைல் இன்டர்நெட் சேவையை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுகிறது. சமூக வலைதளங்கள் வழியாக தவறான தகவல் மற்றும் தவறான வதந்திகள் பரவுவதை தடுக்கவே மொபைல் இண்டர்நெட் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையாளர்கள் குழுவாக இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளதால் மொபைல் இணைய சேவை மணிப்பூரில் இப்போதைக்கு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பிராட்பேண்ட் இணையதள சேவைகள் திரும்பவும் வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் அண்மையில் போட்ட உத்தரவு தான் காரணம் ஆகும். இந்த உத்தரவை எதிர்த்து மணிப்பூர் மாநில அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்தே மணிப்பூரில் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகர்கள், அலுவலகத்தில் வேலை செய்வோர், வீட்டில் இருந்தே வேலை செய்வோர் உள்ளிட்ட முக்கிய பயன்பாட்டிற்கு மட்டுமே தற்போது பிராட்பேண்ட் இணைய சேவை மணிப்பூரில் வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications