உத்தரகண்ட்டில் ஒரே மாதத்தில் 1800% அதிகரித்த கொரோனா.. சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா.. ஷாக் தகவல்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கும்பமேளா நடந்து முடிந்த பிறகு, கொரோனா பரவல் 1800% வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளா நடைபெறும். ஆனால், இந்த முறை கொரோனா காரணமாக இந்த நிகழ்வு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது.
இருப்பினும் கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரசு கும்பமேளாவை நடத்த உத்தரகண்ட் அரசு முடிவு செய்தது.

உத்தரகண்ட்டில் கும்பமேளா
வழக்கமாக நான்கு மாதங்கள் வரை நடத்தப்படும் கும்பமேளாவை இந்த முறை ஒரு மாதம் மட்டும் நடத்தப்பட்டது. இதில் கங்கை நதிக்கரையில் புனித நீராட வரும் பக்தர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மாஸ்க்குகளை அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் ஆகியவற்றையும் பின்பற்றுமாறு அம்மாநில அரசு பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தது.

1800% உயர்ந்த கொரோனா பரவல்
இருப்பினும், அரசின் எந்த அறிவிப்பும் களத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை அதன் பின்னர் உறுதி செய்யப்படும் கொரோனா வழக்குகள் உணர்த்துகின்றன. கும்பமேளா நடைபெற்ற காலகட்டத்தில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை மட்டும் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் 1800% அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா
கும்பமேளா நடந்த கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதிதாக உத்தரகண்ட் மாநிலத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி கும்பமேளாவில் 35 லட்சம் பேரும், ஏப்ரல் 14ஆம் தேதி 13.52 லட்சம் பேரும் ஹரித்துவாரில் குவிந்தனர்.இப்படி அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கும்பமேளா நிகழ்வு சூப்பர் ஸ்ப்ரெட்டராக நிகழ்வாக மாறியுள்ளது.

உயிரிழப்பும் அதிகரிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது வரை 1,713 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கும்பமேளாவுக்கு முன்பு வரை உத்தரகண்ட்டில் மொத்தமாகவே சுமார் 3,000 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். தற்போது மாநிலத்தில் கொரோனா பாசிடிவ் விகிதமும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 24% உயர்ந்துள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படும் நால்வரில் ஒருவருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. அதேபோல சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை கும்பமேளா தொடங்குவதற்கு முன் 1,863ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் 24இல் 33,330 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
உத்தரகண்ட்டில் சுகாதா துறையையும் கையில் வைத்துள்ள முதல்வர் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக விமர்சித்துள்ள காங்கிரஸ், இதற்கு முன்னர் எந்த நிர்வாக பதவிகளையும் வகிக்கவில்லை, என்றும் அதனால் அவரால் மாநிலத்தைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளது. மேலும், கொரோனா பரவல் அதிகரிக்கக் கும்பமேளா நிகழ்வே முக்கிய காரணம் என்றும் குற்றஞ்சாட்டியது.












Click it and Unblock the Notifications