அதெப்படி ‘அம்மா’வை அடிக்கலாம்... பழிக்குப் பழி வாங்க வாளுடன் 3 மாடி ஏறிச் சென்ற கல்லூரி மாணவர் கைது!
மும்பை: மும்பையில் தனது தாயை அடித்த பெண்ணை வெட்டுவதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் கையில் வாளுடன் மூன்று மாடி வெளிப்புறமாக ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே பயந்தரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தோனி கோபால் (20). இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள பிளனேட்டரியா காம்ப்ளக்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது தாய்க்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது தோனியின் தாயாரை அப்பெண் அடித்ததாகக் கூறப்படுகிறது. கல்லூரி முடிந்து வீடு திரும்பிய தோனி இதைக் கேட்டு ஆவேசமானார்.
உடனடியாக தனது வீட்டில் இருந்த பெரிய வாளை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை வெட்டுவதற்காக சென்றுள்ளார் தோனி. ஆனால் தோனி வருவது குறித்து அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தார் வீட்டுக் கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத தோனி, வெளிப்புறமாக சுவற்றைப் பிடித்துக் கொண்டு கையில் வாளுடன் மூன்றாவது மாடிக்குச் சென்றார். பின்னர் அப்பெண் குடியிருந்த வீட்டின் பால்கனிக் கண்ணாடிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர் முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கிய தோனியை வளைத்துப் பிடித்த குடியிருப்புவாசிகள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதில் ஆவேசமாக கையில் வாளுடன் ஒவ்வொரு மாடியாக பால்கனி சுவரைப் பிடித்துக் கொண்டு தோனி மேலே ஏறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications