பாஜகவில் யாரும் அதிருப்தியில் இல்லை: அத்வானியை சந்தித்த பின் சுஷ்மா
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அத்வானி. இதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி நேற்று கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
ஆனால் அத்வானியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் பிரதமர் வேட்பாளரான மோடி, நேரில் அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றார்.
பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்ட போது கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் அத்வானி. ஆனால் அப்படி ஏதும் தற்போது செய்யாமல் கடிதம் ஒன்றை மட்டும் கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறமாட்டார் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மூத்த பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அனந்த்குமார் ஆகியோர் அத்வானியின் வீட்டுக்குச் சென்று அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், பாஜகவில் யாரும் அதிருப்தியாக இல்லை என்றார்.