சீனாவை வழிக்கு கொண்டுவர 'ஜேம்ஸ்பாண்ட்' கையில் பொறுப்பை கொடுத்த இந்தியா!
இந்தியா சீனா இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்ல உள்ளார்.
டெல்லி: இந்திய சீன எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ராஜதந்திரத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சீனாவுக்கு அனுப்பி ராஜதந்திர ரீதியான உரையாடலை மேற்கொள்ளவுள்ளது இந்தியா.
வரும் 26 சீன விஜயம் மேற்கொள்ளும் தோவல், எல்லை விவகாரம், படைக்குவிப்பு, பதுங்கு குழி அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார். ராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனா சீனாவின் உறவின் முக்கியத்துவத்தையும் தோவலை பயணம் வெளிக்காட்டும் என்று சொல்லலாம்.
எல்லையை ஒட்டி, சாலைகள் அமைத்து வரும் சீனாவின் போக்கு இந்தியாவின் போர் திறன்சார்ந்த வியூகத்தை பாதிப்பதாக இந்தியா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாலை அமைக்கும் விவாகரம் தோவலின் பயணத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும்.
ஆலோசனை
கடந்த வெள்ளியன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்ம ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லியுடன் தோவல் ஆலோசனை செய்தார். டோக்லாம் பகுதியில் நிலவிவரும் சூழல், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக அணுகுவது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் எடுத்துரைத்துள்ளார்.
கட்சிகள் கேள்வி
ஆலோசனையின் போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? சீனா விவகாரத்திற்கா, காஷ்மீர் விவகாரத்திற்கா என்பதை அரசு முடிவு செய்யவேண்டுமென அரசியல்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ராஜதந்திரம்
எல்லையில் மிகபதட்டமாக இருக்கும் நிலையை மாற்ற இந்தியா முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை, ராஜ தந்திர ரீதியிலும் எல்லை பிரச்னையை எதிர்கொண்டு நாட்டின் பாதுகாப்பு அரசு உறுதி செய்யவேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
திறமையாளர்
தோவலின் சீனப்பயணம் இதற்கு உதவுமா? இந்தியாவின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கபோகிறது டிராகன் நாடு? நட்பு தொடருமா? என எழும் கேள்விகளுக்கு வரும் 26 ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும். தோவல் திறமையாளர். உளவு விவகாரங்களிலும், ராஜதந்திரங்களிலும் கை தேர்ந்தவர் என்பதால் அவர் இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்படுபவர். பதற்றத்தை குறைக்க அவரிடம் ஃபார்முலா இருக்கும் என நம்பலாம்.