ஆஹா.. ஜொலிஜொலிக்குதே.. இதுதான் அயோத்தி ராமர் கோவில் தங்க கதவு.. போட்டோ எப்படி இருக்கு பாருங்க!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவில் கருவறைக்குள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தங்க கதவின் போட்டோ என்பது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான முந்தைய கோவில் பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேவமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. 22ம் தேதி கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரம்பரிய நாகரா கட்டடக்கலையில் மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் அமைய உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. ராமர் கோவில் கிழக்கு மேற்காக 380 அடி நீளமும், 250 அடி அகலமும் கொண்டது. கோவிலின் மொத்த உயரம் என்பது 161 அடியாகும். தற்போது கோவிலில் முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தற்போது கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான ராமர் சிலை தேர்வு என்பது கடந்த வாரம் நடந்தது. ஓட்டெடுப்பு முறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை கர்நாடகாவை சேர்ந்த சிற்பி வடிவமைத்துள்ளார். இந்த சிலை என்பது 51 இன்ச் உயரம் கொண்டது. இதன் எடை என்பது 1.5 டன் ஆகும். ராமரின் தலையில் கிரீடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் போட்டோ இன்னும் வெளியிடப்படவில்லை. மிகவும் ரகசியமாக அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யும் நாளில் தான் அந்த சிலையின் வடிவம் என்பது மக்களுக்கு தெரியவரும். இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நுழைய தங்கத்தால் செய்யப்பட்ட கதவு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவின் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த கதவு என்பது தங்கத்தால் செய்யப்பட்டுள்ளதால் மினுமினுக்கிறது. கதவில் யானைகளின் வடிவங்கள் உள்ளிட்டவை பக்தர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த ராமர் கோவிலில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் இருக்கும். கோவில் தூண்கள் மற்றும் சுவர்கள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கோவிலில் மொத்தம் 5 மண்டங்கள் இருக்கும். நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என ஐந்து மண்டபங்களை ராமர் கோவில் கொண்டிருக்கும். கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் வந்து செல்ல வசதியாக சாய்தளங்கள், லிப்ட் வசதி அமைக்கப்படுகிறது. கோவிலை சுற்றி 732 மீட்டர் நீளம், 14 அடி அகலத்தில் பார்கோட்டா காம்பவுண்ட் சுவர் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications