மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மீது மை வீச்சு.. மாணவர்கள் அட்டூழியம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மீது மருத்துவ கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று பார்வையிட சென்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், காரில் ஏற முயன்ற அமைச்சர் ஜே.பி.நட்டா மீது மை வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது கல்லூரியில் அடிப்படை வசதி ஏதும் இல்லை என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் மருத்துவப் பிரிவுகளுக்கான வகுப்புகள் முறையாக தொடங்கப்படவில்லை எனக் கூறி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் மீது கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.