"இது மோடியின் ஆட்சி.. சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.." ஆவேசமான அமித் ஷா
திஸ்பூர்: பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்று அமித் ஷா அசாம் மாநிலத்தில் பேசினார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது.

அமித் ஷா: இதற்கிடையே அசாமின் லக்கிம்பூரில் தேர்தல் பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேசியப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார். நரேந்திர மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்று சொன்ன அமித் ஷா, வங்கதேச எல்லையில் நடந்த ஊடுருவலை மொத்தமாக நிறுத்தியதும் மத்திய பாஜக தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "1962 சீன அத்துமீறிய போது அப்போதைய பிரதமர் நேரு அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு உதவாமல் டாட்டா காட்டினார். இந்த மாநில மக்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஆனால் இப்போது, சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. டோக்லாமில் கூட நாம் அவர்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறோம்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
பதிலடி: லடாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியாவில் சீனா அத்துமீறும் நிலையில், அதைத் தடுக்க பாஜக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமித் ஷா இப்படிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அசாம் வழியாக முன்பு வங்கதேசத்தில் இருந்து தொடர்ந்து ஊடுருவல் நடந்தது. அப்போது மத்தியில் மோடி அரசும், இங்கு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் அரசும் அமைந்தன. இப்போது ஊடுருவல் நின்று விட்டது என்றே கூறலாம். சில நாட்களுக்கு முன்பு, அசாமின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசி இருக்கிறார். அசாமிற்கு அவரது பாட்டி செய்ததை நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
சரணடைந்துள்ளனர்: ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஆயுதமேந்திய பல அமைப்புகள் சமாதான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர். அசாமில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தது மோடி அரசு.. 9,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
நரேந்திர மோடி அரசு அசாம் மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் இதயம் என்றால் அது அசாம் தான். இதனால் அசாம் மாநிலத்தின் வளர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அசாமின் சிறந்த எதிர்காலத்திற்காக எங்கள் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய நேரம் இது.
அசாம் நிதி: 2004-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அசாமுக்கு ரூ.1,62,000 கோடி நிதி மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரம் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.4,15,000 கோடி நிதியை அசாமிற்கு ஒதுக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அசாம் ஒரு வளர்ந்த மாநிலமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு மொத்தம் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து அனைத்து மாநிலங்களைப் போல ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்












Click it and Unblock the Notifications