மாநில அந்தஸ்து குறித்து பேசி.. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்! காங்கிரசுக்கு அமித்ஷா காட்டம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறித்து தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில அந்தஸ்து குறித்து பேசி, மக்களை முட்டாள்களாக ஆக்க வேண்டாம் என்று அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதாலும், சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்ட பிறகு தேர்தல் நடைபெறுவதாலும், இந்த தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறது. பாஜக தனித்து களம் காண்கிறது. மறுபுறம் மெகபூபா முக்தி தனியாக போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அந்தஸ்து குறித்து பேசி, மக்களை முட்டாள்களாக ஆக்க வேண்டாம் என்று அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.
இரண்டாவது நாளாகா இன்று, ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த உரையின்போது மேற்குறிப்பிட்ட பதிலடி கொடுத்திருக்கிறார்.
"காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம் என்று கூறுகின்றன. மாநில அந்தஸ்த்தை யார் கொடுக்க முடியும்? மத்திய அரசாலும், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது முடியும். எனவே மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். தேர்தலுக்குப் பிறகு உரிய நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று கூறியுள்ளோம். இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளோம். மக்களை தவறாக வழிநடத்துவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications