தவறான சிகிச்சை: இறந்த பெண் டாக்டர் குடும்பத்துக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு

அமெரிக்காவில் வசித்து வந்தவர் குழந்தைகள் நல மருத்துவரான அனுராதா சாஹா. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அவரது கணவர் மருத்துவர் குணால் சாஹா. அவர்கள் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவுக்கு வந்தனர். ஏப்ரல் 25ம் தேதி அவருக்கு சரும அலர்ஜி ஏற்படவே அவர் மருத்துவர் சுகுமார் முகர்ஜியை பார்த்துள்ளார். அவரோ மருந்து எதுவும் எழுதிக் கொடுக்காமல் ஓய்வு எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மே மாதம் 7ம் தேதி அனுராதாவுக்கு சரும பிரச்சனை அதிகரித்துவிட்டது. இதையடுத்து மருத்துவர் முகர்ஜி அவருக்கு டெபோமெட்ரோல் ஊசியை பரிந்துரைத்துள்ளார். தினமும் இரண்டு வேளை தலா 80 மில்லிகிராம் அளவில் ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த ஊசி போட்ட பிறகு அனுராதாவின் நிலைமை மோசமானது.
இதையடுத்து அவர் மே மாதம் 11ம் தேதி அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில்(அம்ரி) அனுமதிக்கப்பட்டார். அவர் முகர்ஜியின் கண்காணிப்பில் இருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அப்போது அவருக்கு வயது 36.
மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் அனுராதா இறந்துவிட்டார் என்று கூறி அவரது கணவர் குணால் இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையத்தை அணுகினார். அவரது புகாரை விசாரித்த தீர்ப்பாணையம் குணாலுக்கு ரூ.1.73 கோடி வழங்குமாறு மருத்துவமனைக்கு கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தொகை உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இழப்பீடு வழங்காததால் இந்த வழக்கை தீர்ப்பாணையம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியது
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குணாலுக்கு தீர்ப்பாணயம் நிர்ணயித்த தொகைக்கு 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.5.96 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் பல்ராம் பிரசாத் மற்றும் சுகுமார் முகர்ஜி ஆகியோர் குணாலுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவர் பைத்யநாத் ஹல்தர் ரூ.5 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை வழங்கியவுடன் இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே ரூ.5.96 கோடி இழப்பீடு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும்.
குணால் சாஹா அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications