எம்.பி வீட்டு சோஃபா, திரைச்சீலைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவசமாக துவைத்துக் கொடுக்கப்படும்!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் ஜரூராக நடந்து முடிந்து 30 வருடத்துக்கு அப்புறமாக தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது. இனி நம்ம பிழைப்பை பார்க்கனுமில்லையா. நாம தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்.பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன சலுகைகள் கிடைக்கிறது அப்படீங்கிறதை பார்த்தாதானே, நமக்கு என்ன கடமையை அவர்கள் செய்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்க முடியும்.
எம்.பிக்களுக்கான சம்பளம் சட்டத்தின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு நமது எம்.பிக்கள் பெரும் சம்பளம் கம்மிதான்.... அரை லட்சம். தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுவது தனி. இதுமட்டுமா, நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போதோ, அல்லது நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நடக்கும்போதோ, அதில் பங்கேற்று கையெழுத்து மட்டும் போட்டால் போதும், அன்றைய நாளுக்கு ரூ.2ஆயிரம் தினப்படியாக வழங்கப்படும். கையெழுத்தை போட்டுவிட்டு காபி குடிக்க போவதாக கூறிவிட்டு நாள் முழுவதும் கட் அடித்தாலும் படிக்கு எந்த பங்கமும் ஏற்படாது.
பணமாக மட்டுமில்லை, பல சலுகைகளையும் நமது சட்ட உருவாக்குநர்கள் பெறுகிறார்கள். டெல்லியில் ஒதுக்கப்படும் வீட்டுக்கு வாடகை கிடையாது, அந்த வீட்டில் ஆண்டுக்கு 4 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்த அனுமதி இலவசம். விமானம், ரயிலில் இலவச பயணம். மூன்று லேண்ட் லைன் போன்கள், இரு செல்போன் இணைப்புகளுக்கு அனுமதி, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் தொலைபேசி அழைப்புகளை இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும், தங்களது தகவல் தொடர்பு அறிவை வளர்த்துக்கொள்ள, கம்ப்யூட்டர், லேப்டாப், பாம்டாப் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். பில்லை காண்பித்தால், ரூ.2 லட்சத்தை அரசு அளித்துவிடும். ஒரு எம்பிக்கு அதிகபட்சம் ரூ.4 லட்சம் கடனும் அளிக்கப்படுகிறது.
ஃபர்னிச்சர்கள் வாங்க ரூ.75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இதில் முக்கியமானது, எம்.பி வீட்டிலுள்ள சோஃபா மற்றும் திரைச்சீலைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவசமாக துவைத்துக் கொடுக்கப்படும்.