குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் படேல் பஞ்சாப் ஆளுநராகிறார்?
டெல்லி: குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் ஆனந்தி பென் படேல். இதையடுத்து அவரை பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது துணைப் பிரதமராகப் பதவி வகித்த அத்வானியைத்தான் 2014-இல் நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அயோத்தி வழக்கின் நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் நரேந்திர மோடியை அப்பதவிக்கு முன்னிறுத்தியது பா.ஜ.க.

இதையடுத்து பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் 75வயதை தாண்டிய அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாந்த குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்மைக் காலமாக 75 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகும் மரபு பாரதீய ஜனதாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 75 வயது பிறந்த கொண்டாடவுள்ளேன். அதனையொட்டி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறேன்.
இரு மாதங்களுக்கு முன்பு என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன். துடிப்பான குஜராத், சட்டமன்ற தேர்தல் போன்றவை நடைபெறவுள்ளதால் புதிய முதல்வர் பணியாற்றுவதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என்பதால் இரு மாதங்களுக்கு முன்பே என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக குஜராத்தில் தலித்களுக்கு எதிராக வன்முறை நீடிப்பதாக தேசிய அளவில் சர்ச்சை எழுந்தது. இதனால், ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் நியமிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications