“அங்க போகாதீங்க..” பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதை மீறி படகில் ஏறிய சந்திரபாபு நாயுடு.. கலங்கிட்டாரே!
விஜயவாடா: விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக விஜயவாடாவில் பெய்து வந்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவில் உள்ள சன்னப்புபட்டிலா சென்டரில் உள்ள வீட்டின் மீது பாறாங்கல் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். குண்டூர் மாவட்டம் உப்பலபாடு என்ற இடத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களை காருடன் வெள்ளம் அடித்துச் சென்றது. மேலும், மங்களகிரி கந்தலய்யபேட்டாவில் மற்றொரு நிலச்சரிவில் மூதாட்டி உயிரிழந்தார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை நிலவரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை முடங்கியதால், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் உதவுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று விஜயவாடா பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அப்போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரின் அளவு குறையாமல் இருந்து வருவதால் அப்பகுதிக்கு படகில் செல்வது பாதுகாப்பானது இல்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், அதனையும் மீறி, படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லைஃப் ஜாக்கெட் அணிந்தபடி அவர் படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு, மக்களோடு துணை நிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் அவலத்தை நாங்கள் நெருக்கமாகப் பார்த்தோம் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். வெள்ளம் வடியும் வரை நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
ஆந்திரா சின்னாபின்னமாகுது.. கண் முன்னே இளைஞரை அடித்துச் சென்ற வெள்ளம்.. அதிர்ச்சி வீடியோ!
மேலும், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதும், மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசரத் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர், உணவு வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்திலும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications