புயலையும் கொடுத்து பொரியலுக்கு மீனையும் கொடுத்த பேய்ட்டி! ஆந்திர மக்கள் லக்கி.. வைரல் வீடியோ
Recommended Video

விசாகப்பட்டினம்: சென்னைவாசிகள் புயல் என்றாலே வருத்தப்படுகிறார்கள், ஆனால் ஆந்திரவாசிகளோ மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஏன் தெரியுமா, பேய்ட்டி புயலின்போது அவர்களுக்கு மழையுடன் மீனும் சேர்ந்து கிடைத்தது.
வங்கக் கடலில் பேய்ட்டி புயல் உருவானது. இந்த புயல் சென்னைக்கு வரும் என கூறியபோது சென்னை மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். அவர்கள் முன் வர்தா, தானே புயல் நினைவுக்கு வந்தது.
இதையடுத்து அந்த புயல் மதியாதார் தலைவாசல் மிதியாதே என பழமொழிக்கேற்ப ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. அங்கு இரு நாட்களுக்கு முன் கரையை கடந்தது.

நல்ல பெயர்
அப்போது பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. கஜா அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பேய்ட்டி நல்ல பெயரை வாங்கிவிட்டு சென்று விட்டது.

வீடியோ வைரல்
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள யானம் என்ற இடத்தில் உள்ள அமலாபுரம் பகுதியில் மழையுடன் சேர்ந்து மீன்களும் வந்ததாம். சுமார் 100 மீன்கள் வரை மழையுடன் சேர்ந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து அதை ஷேர் செய்துள்ளார்.

மீன்கள் வரவில்லை
ஆலங்கட்டி மழை சரி, அதெப்படி மீன் மழை என யோசனையில் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு தொற்றிக் கொண்டது. இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் வானில் இருந்து மீன்கள் வரவில்லை.

காற்றின் வேகம்
பேய்ட்டி போன்ற வலுவான புயல்கள் கரையை கடக்கும் போது சில நேரங்களில் நீர் நிலைகளில் உள்ள மீன்கள், தவளைகள் ஆகியவற்றை கரையில் போட்டு விடும். மேலும் புயல் காலங்களில் காற்றின் வேகம் காரணமாக நீரின் தன்மை மாறுபடும்.

மீன் மழை அல்ல
அப்போது மீன் சுவாசிக்க தேவையான கரையும் தன்மை கொண்ட ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் மீன்கள் குளங்கள், குட்டைகளை விட்டு வெளியேற முயற்சிக்கும். அச்சமயம் புயல் காற்று அடித்துக் கொண்டு நிலத்தில் போட்டுவிடும். அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபணம் ஆகாத நிலையில் இதை மீன் மழை என நாம் சொல்லக் கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications