மமதா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியில் இணைய அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை, இன்று நேரில் சந்தித்து, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் இணையுமாறு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, இடதுசாரி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களை ஏற்கனவே சந்திரபாபுநாயுடு சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலக அலுவலகத்தில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
வரும் 22ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ளார். இதில் மம்தா பானர்ஜியும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகளை இணைக்க வேண்டிய தேவை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம். இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார்.