கண்ணை மூடுங்க.. சர்பிரைஸ் கிப்ட் தரேன்.. மணமகனின் கழுத்தை அறுத்த மணப்பெண்.. ஆந்திராவில் பரபரப்பு
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை மணமகள் அறுத்ததை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் வரும் மே 26 ஆம் தேதி நடைபெற தேதி குறிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இருந்து திருமணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய ராமகிருஷ்ணாவை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம் என்று மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் புஷ்பா.
விருதுநகர் பாலியல் கொடுமையை கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம்.. சசிகலா புஷ்பா பங்கேற்பு
ஆள் இல்லாத இடம்
அங்கு இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது ஆள் இல்லாத இடத்திற்கு பைக்கை நிறுத்த சொன்ன புஷ்பா, ராமகிருஷ்ணாவிடம் நான் உனக்கு ஒரு சர்பிரைஸ் கிப்ட் வாங்கி வைத்துள்ளேன் என கூறியுள்ளார். கட்டிக்க போகும் பெண் அப்படி தனக்காக என்னதான் வாங்கி வந்திருக்கிறாள் என்பதை காண ராமகிருஷ்ணா ஆசையாக இருந்தார்.
சர்பிரைஸ் கிப்ட்
பின்னர் அந்த கிப்ட் வேண்டுமென்றால் நீ உன் கண்களை மூடு என புஷ்பா கூறினாராம். ராமகிருஷ்ணாவும் கண்களை மூடியதாக தெரிகிறது. அப்போது வேண்டாம் நீ நைசாக பார்த்துவிடுவாய், எனவே நான் எனது துப்பட்டாவில் கண்களை கட்டுகிறேன் என கூறிய புஷ்பா, தனது துப்பட்டாவை கொண்டு ராமகிருஷ்ணாவின் கண்களை கட்டியுள்ளார்.
கத்தியால் கழுத்தை அறுத்த பெண்
அப்போது ஹேண்ட் பேகில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ராமகிருஷ்ணாவின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணா வலியால் துடித்தார். இதையடுத்து அங்கிருந்து புஷ்பா தப்பியோடிவிட்டார். ராமகிருஷ்ணாவின் அலறல் சப்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பெண் பொய் வாக்குமூலம்
ஆனால் நரம்புகளில் காயம் இருந்ததால் அதிக ரத்தம் வெளியேறியதால் ராமகிருஷ்ணாவின் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக கூறினார்.
மணப்பெண் கைது
ஆனால் மயக்கமடையும் முன்னர் ராமகிருஷ்ணாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் புஷ்பா தனது கழுத்தை அறுத்ததை வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து புஷ்பாவை போலீஸார் கைது செய்தனர். ராமகிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள புஷ்பாவுக்கு விருப்பமில்லை என்றும் பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.