ஆந்திராவில் தேர்தல் நாளில் வன்முறை.. ஆக்ஷனில் இறங்கிய தேர்தல் ஆணையம்.. 2 எஸ்பிக்கள் சஸ்பெண்ட்
விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தில் கடந்த 13 ஆம் தேதி நடந்த லோக்சபா, சட்டமன்ற தேர்தலின் போது, திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக 2 எஸ்.பிக்கள் மற்றும் கலெக்டரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து கடந்த 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணியில் ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதுபோல் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. எனினும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது.
தேர்தல் பிரசாரத்தின் போதே ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டது. இதேபோல் வாக்குப்பதிவு நடந்த நாளன்றும் பல இடங்களில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பல்நாடு மாவட்டத்தில் இரு தரப்பினரும் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
குண்டூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கோபி ரெட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டை தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்கினார்கள். இதில் 2 கார்கள் நொறுக்கப்பட்டன. மாச்சர்ல தொகுதி செட்டிபாளையம், ரெயில்வே கொடூர் தொகுதியின் தலவாய்பள்ளி வாக்குச்சாவடிகளில் மர்ம கும்பல் புகுந்து, அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்து நொறுக்கினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. தும்மரகோட்டா பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் அங்கும் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. தெனாலி சட்டசபை தொகுதியில் வாக்காளர் ஒருவரை தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சிவகுமார் தாக்கியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த இந்திய தேர்தல் ஆணையம், இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி மற்றும் போலீஸ் டிஜிபி ஹரீஷ் குமார் குப்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தல் நடைபெற்ற போதே வன்முறை நடைபெற்றுள்ளது. அங்குள்ள எஸ்.பிக்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படிப்படையில் பல்நாடு மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். திருப்பதி எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல பல்நாடு மற்றும் அனந்தபுரம் மாவட்ட எஸ்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications