ஒடிஸாவில் ரத்த சோகைக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் பெண் பலி?
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணிற்கு தவறான ரத்த வகையை செலுத்தியதால் அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புவனேஸ்வரத்தில் குட்ராவில் புடகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி காகூ (25). இவருக்கு ரத்தசோகை நோய் இருந்தது. இதனால் இவர் ரூர்கோலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

அந்த மருத்துவமனைக்கு வந்து அவரது ரத்த பிரிவை ஏற்றிக் கொண்டு வீடு செல்வது வழக்கம். பின்னர் மருத்துவரின் அறிவுரையின் படி இடைவெளிவிட்டு மீண்டும் வந்து ரத்தம் ஏற்றி செல்வார்.
அந்த வகையில் அவர் ரத்தம் ஏற்றிக் கொள்ள கடந்த வியாழக்கிழமை மதியம் ரூர்கேலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் ரூர்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஓ பாசிட்டிவ் ரத்த வகைக்கு பதிலாக பி பாசிட்டிவ் ரத்த வகை ஏற்றப்பட்டதாக உறவினர்கள் செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த பெண்ணின் இறப்பு குறித்து குட்ரா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரூர்கேலா அரசு மருத்துவமனையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை மருத்துவமனையில் யாராவது தவறிழைத்திருந்தால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாக உறவினர் கூறும் புகாரை ரூர்கேலா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெகதீஷ்சந்திர பெஹேரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தம் அவரது ரத்த வகையை சேர்ந்ததுதானா என சரி பார்த்த பிறகே ஏற்றப்பட்டது. எனவே ரத்த வகை ஏதும் மாற்றி ஏற்றப்படவில்லை.
ரத்த சோகை என்பது உடலில் உள்ள ரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாடாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைபாடு அல்லது ஹீமோகுளோபின் எனும் ரத்த புரதத்தின் அளவு குறைவு, என்பதே ரத்த சோகையாகும். இதற்கு நோயாளியின் ரத்த வகைக்கேற்ப அவருக்கு ரத்தத்தை ஏற்றுவதும் ஒரு வகையான சிகிச்சையாகும்.












Click it and Unblock the Notifications