ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு - இன்று விசாரணை!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
ஜல்லிகட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற நிலை இருந்தது.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இருப்பினும் அந்த அறிவிக்கையிலும் கரடி, புலி, சிங்கங்களைப் போல விலங்குகள் பட்டியலிலேயே காளையும் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் அனுமதிக்கு எதிராக மொத்தம் 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் தலைமை நீதிபதி தாக்குர் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் முடிவெடுக்கும் போது தமிழக அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேவியட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது ஜல்லிக்கட்டுக்கான அனுமதி தொடருமா? தடை விதிக்கப்படுமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications