நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது: கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே ‘அட்வைஸ்’
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது.
ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூடாது என்று ஊழலுக்கு எதிராக போராடிவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்திநிறுவன செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹசாரே, ‘நான் என்ன நினைக்கிறேன் என்றால் டெல்லி மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுப்பதிலே அவர் கவனம் செலுத்த வேண்டும். கெஜ்ரிவால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.