ஆந்திரா என்கவுண்டர்: ஒரு தமிழரின் உடலை மட்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சசிகுமார் என்பவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கடந்த 6ம் தேதி தமிழர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். தற்காப்புக்காக நடந்த என்கவுண்டர் என ஆந்திர போலீசார் கூறினாலும், இது திட்டமிடப்பட்ட படுகொலை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய 3 தொழிலாளர்கள் டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் நேரடி சாட்சியம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, என்கவுண்டரில் பலியான சசிகுமார் என்பவரது மனைவி முனியம்மாள், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே அவரது உடலை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சசிகுமாரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர். ஹைதராபாத் நிஜாம் முருத்துவக் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் இந்த மறுபிரேதபரிசோதனை செய்யவேண்டும் என்றும், 20ம் தேதிக்கு முன்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்ற 5 பேரின் குடும்பத்தினரில் கோரிக்கை விடுக்காததால் அவர்களது உடலை பரிசோதனை செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications