20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... நஷ்டஈடு தர முடியாது: ஆந்திர உள்துறை அமைச்சர்
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு எதுவும் தர முடியாது என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.
செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி 20 தமிழக தொழிலாளர்கள், ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பலியான தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. அதேபோல், அதிமுக மற்றும் தேமுதிக சார்பிலும் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், என்கவுண்டர் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு சார்பில் விளக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் அம்மாநில உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, தலைமை செயலர் கிருஷ்ணாராவ், மாநில போலீஸ் டிஜிபி ராமுடு உட்பட உயர் வனத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா. அப்போது அவர் கூறியதாவது :-
விரைவில் உண்மைகள் வெளிவரும். மேலும் தமிழக முதல்வரின் கடிதத்துக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிப்பார். மனித உரிமை ஆணையம், மாநில உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கும் இதுகுறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திர அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தமிழர்களை வேண்டுமென்றே என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை' என்றார்.












Click it and Unblock the Notifications