மயக்க மருந்து கொடுத்து டாக்டரை பலாத்காரம் செய்த பிரிகேடியர்.. விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மீது ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புகாருக்குள்ளாகியுள்ள அதிகாரியின் பெயர் மனோஜ் திவாரி. இவர் பிரிகேடியர் அந்தஸ்தில் இருப்பவர். தற்போது ராணுவப் போர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ராணுவப் பிரிவில் பணியில் இரு்தார். அபபோது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சர்ச்சை வெடித்தது.
அப்போது அவர் கர்னல் பொறுப்பில் இருந்து வந்தார். சம்பந்தப்பட்ட பெண் டாக்டரிடம் தனக்குத் திருமணமானதை மறைத்து அவரை நைசாசகப் பேசி தனது அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நாடு திரும்பிய அவர் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் இந்திய ராணுவத் தலைமைக்கு புகார் அனுப்பினார். அதில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக மனோஜ் திவாரி உறுதி அளித்ததாகவும், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது திவாரி மீது ராணுவ கோர்ட் விசாரணைக்கு ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது.