கொல்கத்தாவில் கைதான 5 ஈழத் தமிழர்களும் அப்பாவிகள்.. போலீஸ்
கொல்கத்தா: கொல்கத்தாவில் கைதான 5 ஈழத் தமிழர்களும் அப்பாவிகள். அவர்களுக்கு எந்த தடை செய்யப்பட்ட இயக்கத்துடனும் தொடர்பு ஏதும் இல்லை. அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி போலி பாஸ்போர்ட் தயாரித்து சிலர் அழைத்து வந்துள்ளர். அவர்களைத் தற்போது தேடி வருகிறோம் என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் சமீபத்தில் சத்யநாதன் ரத்னராசா, ஜோகலிங்கம் ஷில்னன் என்கிற குணசேகரன், மங்களேஸ்வரன், சிபசிதபன் சிபராசா, மெஹதி ராசா ககுபன் என்கிற கதீஸ் ஆகிய ஐந்து ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.

அனைவரும் சென்னையிலிருந்து ரயில் மூலம் வந்ததாக தெரிய வந்தது. இவர்கள் எதற்காக கொல்கத்தா வந்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐந்து பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் உள்பட எந்த இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் தவிர சென்னையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மாலிக் பாட்சா, ஷபீக் அகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஈழத் தமிழர்களுடன் வந்தவர்கள் ஆவர்.
இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறுகையில், ஐந்து ஈழத் தமிழர்களும் சென்னையில் உள்ள நிவாரண முகாமில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தனர். அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பு ஒரு கும்பல் அணுகியுள்ளது. அவர்களை நம்பி இவர்கள் முகாமிலிருந்து வெளியேறி கொல்கத்தா வந்துள்ளனர்.
பிரான்ஸ் அனுப்புவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இதில் இரண்டு பேர் சிக்கியுள்ளனர். மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களையும் விரைவில் கைது செய்வோம். கைது செய்யப்பட்டுள்ள பாட்சா, அகமது ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. பலரை இவர்கள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
தற்போது கூட இந்த ஐந்து தமிழர்களையும், பிரான்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சேர்த்து விடுவதாக கூறித்தான் அழைத்து வந்துள்ளனர்.
ஐந்து தமிழர்களையும் சிலிகுரி அழைத்துச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேபாளத்திற்கு அனுப்பி பின்னர் வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டத்துடன் இவர்கள் கொல்கத்தா வந்ததாக சந்தேகப்படுகிறோம்.
ஐந்து தமிழர்களுக்கும் தமிழைத் தவிர வேறு மொழி தெரியவில்லை. எனவே மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications