கால் இடறி 'மோடி' கட் அவுட் மீது மோதிய இளைஞர்கள் கைது! கடும் விமர்சனத்திற்கு உள்ளான கோவா போலீஸ்
பனாஜி: கோவாவில் கால் இடறி மோடியின் கட் அவுட் மீது விழுந்தவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பாஜகவினர் பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். எனவே மோடியின் கட் அவுட்கள், பேனர்கள் எல்லா இடங்களிலும் பரவலாக பார்க்க முடிகிறது. ஏற்கெனவே ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனை ரேஷன் கடைகளுக்கும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் இதனை ஏற்கவில்லை. இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கால் இடறி மோடியின் கட் அவுட் மீது விழுந்தவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவின் மார்கோவா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் கூறுகையில், "மார்கோவாவின் கரேபந்தில் மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது மூன்று பேர் விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, கணேஷ் ரவி நாரதன்வி, மஞ்சுநாத் மற்றும் சுனில் தொட்டமணி ஆகியோரை கைது செய்திருக்கிறோம். அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 151ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பிரதமரின் கட் அவுட்-க்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோவாவின் இணைய இதழான 'O HERALDO' எனும் இதழில் வெளியாகியுள்ளது. கட் அவுட்டில் மோதியதற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவா மட்டுமல்லாது நாடு முழுவதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கட் அவுட்களை பொதுமக்கள் நடக்கும் பாதையில் வைக்க வேண்டாம் என்றும், அதற்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications