உச்சநீதிமன்றம் மீட்டுக் கொடுத்த ஆட்சியை தக்க வைக்க முடியாமல் அருணாச்சல் முதல்வர் நபம்துகி தத்தளிப்பு
இடாநகர்: உச்சநீதிமன்றம் மீட்டுக் கொடுத்துமே ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நபம்துகி தத்தளித்து வருகிறார்.
அருணாச்சலபிரதேசத்தில் நபம்துகி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்க்கப்பட்டது. நபம்துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து விலகிய 18 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள் ஆதரவு பெற்று கலிகோபுல் தலைமையில் ஆட்சி அமைத்தனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு அருணாச்சலபிரதேச ஆளுநர் ராஜ்கோவா மிகவும் உதவியாக இருந்தார். ஆட்சியைப் பறிகொடுத்த நபம்துகி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கில் அதிரடியாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவா நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை. அவை செல்லாது என்று தீர்ப்பளித்தது. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் முதல்வரான நபம் துகி
இதனால் அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இருந்த கலிகோபுல் விலக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. நபம்துகி புதிய முதல்வராகப் பதவியேற்றார்.
கூடுதல் அவகாசம்
நபம்துகி சட்டசபையில் பெரும்பான்மையை நாளை நிரூபித்து காட்ட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பொறுப்பை கவனித்து வரும் திரிபுரா ஆளுநர் ததகதா ராய் உத்தரவிட்டார். இதை ஏற்க நபம்துகி மறுத்தார். மெஜாரிட்டியை நிரூபிக்க தனக்கு 10 முதல் 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலக்கும் கலிகோபுல்
இதனிடையே முன்னாள் முதல்வர் கலிகோபுல், தனக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி வருகிறார். அத்துடன் தமக்கு ஆதரவு தரும் 30 எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்து செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.
அதே நேரத்தில் வெறும் 15 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு நிச்சயமாக நபம்துகியால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட இயலாது. எனவே அவரது ஆட்சி கவிழ்ந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.