மணிஷ் சிசோடியாவை துணை முதல்வராக்குகிறார் கேஜ்ரிவால்! சோம்நாத் பார்திக்கு இடமில்லை?
டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசில் முன்னாள் பத்திரிகையாளர் மணிஷ் சிசோடியாவை துணை முதல்வராக்க அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மறுநாள் பதவியேற்கிறார். தமது அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அதிகம் வாய்ப்பளிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் 49 நாள் ஆட்சிக்குப் பின் 2014 பிப்ரவரி 14-ந் தேதி கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அதே பிப்ரவரி 14-ந் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இம்முறை துணை முதல்வராக முன்னாள் பத்திரிகையாளர் மணிஷ் சிசோடியாவை அரவிந்த் கேஜ்ரிவால் நியமிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் முந்தைய கேஜ்ரிவால் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சோம்நாத் பார்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அவரது நிர்வாக செயல்பாட்டில் கேஜ்ரிவாலுக்கு அதிருப்தி இருக்கிறதாம்..
கேஜ்ரிவால் அமைச்சரவையில் கபில் மிஸ்ரா, ஜிதேந்திர தோமர், சந்தீப் குமார், ஆசிம் அகமது கான், ராக்கி பிதலான் ஆகியோர் இடம்பெறக் கூடும் என்கின்றன ஆம் ஆத்மி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications