மோடியுடன் சேர்ந்து யோகா செய்ய காலையிலேயே மேட்டுடன் ராஜ்பாத் வந்த கெஜ்ரிவால்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
சர்வதேச யோகா தினமான இன்று டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதவேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பலவகை ஆசனங்களை செய்தனர்.
மோடி முன்னின்று நிகழ்ச்சியை நடத்தி வைத்து யோகாசனங்களை செய்தார். இந்த நிகழ்ச்சியில் தினமும் யோகா செய்யும் பழக்கம் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு யோகா செய்தார். அவர் அதிகாலையிலேயே யோகா மேட்டுடன் ராஜ்பாத் வந்துவிட்டார்.
இது குறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
யோகா ஒரு நல்ல விஷயம். அனைவரும் யோகா செய்ய வேண்டும். யோகா செய்வதால் மன அழுத்தம் குறையும் என்றார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து முடித்த கையோடு கெஜ்ரிவால் விபாசனா தியானம் செய்தார். அதன் பிறகு முதல்வர் ஆனவுடன் அவர் பெங்களூர் சென்று யோகா உள்ளிட்டவை அடங்கிய நாச்சுரோபதி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.