நிதி ஆயோக் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் அரவிந்த் பானாகரியா நியமனம்!
டெல்லி: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு அமைத்துள்ள நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் தாராள வர்த்தகப் பொருளாதார வல்லுநருமான அரவிந்த் பானாகரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக கடந்த 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் தலைவராக பிரதமர் இருந்தார்.

இந்நிலையில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்த பிறகு, மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது மோடி வெளியிட்டார். இதன்படி கடந்த 1-ந் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் அரவிந்த் பானாகரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொருளாதார வல்லுநர் விவேக் தேவ்ராய், முன்னாள் டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே. சரஸ்வத் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங் ஆகியோர் அலுவல் சாராத உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தாவர்சந்த் கெலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications