பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட்
ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய விவசாயிகளை காட்டிலும் வட இந்திய விவசாயிகள் இந்த சட்டங்களை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் பொருட்கள் வர்த்தக ஊக்குவிப்புச் சட்டம், உள்ளிட்ட 3 சட்டங்களை கடந்த மக்களவை கூட்டத்தொடரில் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் இன்னும் எதிர்ப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இந்த சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதோடு மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக தாம் தீர்மானம் நிறைவேற்றிய காரணத்திற்காக தமது ஆட்சி கலைக்கப்பட்டாலும் கவலையில்லை என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை போல் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருக்கிறார். விவசாயிகள் எதிர்க்கும் இந்த சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என அவர் கூறியுள்ளார்.
தனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எந்நாளும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என அசோக் கெலாட் உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி உயர்த்துவதால் மத்திய அரசுக்கு தலைவலி உருவாகியுள்ளது.
இதனிடையே மாநில அரசுகள் என்னதான் மசோதாக்கள் கொண்டுவந்தாலும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தான் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் செக் வைத்து வருகிறது மத்திய அரசு.