”நாங்களே வெள்ளத்தில் மிதக்குறோம்” சிவசேனா எம்எல்ஏக்களை விரட்டும் காங்கிரஸ்.. அரவணைக்கும் பாஜக அரசு
கவுஹாத்தி: அசாம் வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அம்மாநில பாஜக அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அசாம் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பாஜக வியூகம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்தது. கடந்த 21 ஆம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர்.

அசாமில் அடைக்கலம்
இந்த நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸை சந்தித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமான குஜராத்தில் எம்.எல்.ஏக்களை வைத்திருப்பது பாதுகாப்பில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின்பேரில், பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு எம்.எல்.ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

அசாம் காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த நிலையில், அசாம் மாநிலத்தைவிட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் வெளியேற வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் புபேன் குமார் போரா தெரிவித்து இருக்கிறார். வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அசாம் அரசும் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் மக்களை கண்டுகொள்ளாமல் சிவசேனா எம்.எல்.ஏக்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications