அசாமில் 'பெரிய துணையின்றி' மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக.. ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்
அசாம்: 2021 சட்டமன்ற தேர்தலில், அசாமில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஏபிபி நெட்வொர்க் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (பிப்.26) வெளியிட்டார். அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், ABP Network-C Voter கருத்துக்கணிப்பில், பாஜக அசாமில் 72 இடங்கள் வரை கைப்பற்றி மகத்தான வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 43.8 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47 இடங்கள் வரை வென்று இரண்டாம் இடமே பிடிக்கும் என்றும், 41.4 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போடோலாந்து மக்கள் முன்னணி (Bodoland People's Front) 4 இடங்கள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகவும், இதர கட்சிகள் 3 இடங்களில் வெல்லவும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
2016 சட்டமன்ற தேர்தலில், போடோலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து 74 இடங்களை வென்ற பாஜக, இம்முறை அவர்களின் துணையின்றியே 72 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில், 26 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) கட்சியானது அசாமின் போடோலாந்து பகுதியில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போடோலாந்து மக்கள் முன்னணி போட்டியிட்டது. அதில் BPFக்கு 12 தொகுதிகள் கிடைத்து ஆட்சியில் பங்கு வகித்தது. இதன் பலனாக மூன்று அமைச்சர் பதவிகளும் கிடைத்தன. இந்த சூழலில் பாஜக உடன் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி திடீரென மோதல் போக்கில் ஈடுபட்டது.
இதன் காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலில் போடோலாந்து பகுதியில் உள்ள 12 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், UPPL உடன் கூட்டணி அமைத்து போடோலாந்து பகுதியில் பாஜக போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications