கூட்டு சதி பிரிவை நீக்கும் வழக்கு: கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் உள்ள கூட்டு சதி மற்றும் கூட்டு சதிக்கு தூண்டுதல் ஆகிய குற்றங்களின் கீழான பிரிவுகளை நீக்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்த ஜெயலலிதா தரப்பு, தற்போது அந்த மனுவை திரும்ப பெற்றுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையில் உள்ள கூட்டுசதி போன்ற பிரிவுகளை நீக்ககோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பிலும், கூட்டு சதிக்கு தூண்டியதாக கூறிய பிரிவை நீக்க கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரனை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான தீர்ப்பை உடனே வழங்ககோரி ஜெயலலிதா உட்பட 4 பேர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தனர்.
அந்த மனு இன்று நீதிபதி அரவிந்து பைரரெட்டி முன்பு விசாரனைக்கு வந்தது. அரசு தரப்பில் பவானிசிங், ஜெயலலிதா தரப்பில் குமார் ஆஜர் ஆகினர். விசாரணை தொடங்கிய உடன் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை திங்கள்கிழமை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி, எதற்காக மனு தாக்கல் செய்தீர்கள், ஏன் திடீரென திரும்பபெறுகின்றீர்கள் என கேள்வி ஏழுப்பினார். மேலும், இதுபோன்ற மனுக்களால் மக்கள் பணம் வீண்படுத்தபடுகிறது என தனது கருத்தை தெரிவித்தார்.
மனுவை திரும்ப பெறுவது என முடிவு எடுத்த நிலையில் எதற்கு திங்கட்கிழமை வரையில் கால அவகாசம் கேட்கிறீர்கள், இன்று மாலைக்குள் முடிவு எடுங்கள் என தெரிவித்து வழக்கு விசாரணையை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதன்பிறகு மாலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார், இன்றே வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் இருந்து திடீரென மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.