நோயாளிகள் நெற்றியில் “நிலநடுக்கம்” ஸ்டிக்கர் – பீகார் மருத்துவமனையின் சேட்டை!
தர்பங்கா: பீகார் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மீது "நிலநடுக்கம்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் காயமடைந்து தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களின் நெற்றியில் "நிலநடுக்கம்" என்று ஸ்டிக்கர்கள் ஒட்டி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து அந்த மாவட்டத்தில் நிலநடுக்க நிவாரணப் பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் பாய்தியநாத் சாஹ்னி, தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, நோயாளிகளின் உடலில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டிருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட அமைச்சர், விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மருத்துவமனை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications