வரவு எட்டணா… செலவு பத்தணா…ஏ.டி.எம் தும்தனா… தும்தனா – குறையும் ஏடிஎம் பரிவர்த்தனைகள்
டெல்லி: வங்கிகளின் ஏ.டிஎம் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்று புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஏ.டி.எம் இலவச பயன்பாட்டின் எண்ணிக்கையை குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதன்படி, பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையாக இருந்த இலவச பரிவர்த்தனை 3 ஆக குறைக்கப்பட்டது.
இலவசத்துக்கு கோவிந்தா:
அதைவிட அதிரடியாக, கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே இலவச பரிவர்த்தனை மாதத்துக்கு 5ஆக நிர்ணயிக்கப்பட்டது. சில வங்கிகள் இதை செயல்படுத்தியுள்ளன.
20 ரூபாய் கட்டணம்:
இதன்பிறகு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும் வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சில வங்கிககள் வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கேற்ப சில சலுகைகளை அளித்துள்ளன.
குறையும் வாடிக்கையாளர்கள்:
இருப்பினும், இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஏ.டி.எம் பயன்பாட்டையும் வாடிக்கையாளர்கள் குறைத்து விட்டனர்.
புறக்கணிப்பு அதிகரிப்பு:
வரும் மாதங்களில் ஏடிஎம் பயன்பாட்டை மக்கள் புறக்கணிப்பது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெபிட் கார்டு வைத்திருக்கும் தனது வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்மை பயன்படுத்துவது மாதத்துக்கு 5க்கும் குறைவாகவே உள்ளது என தனியார் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.
சுமை குறைய ஏ.டி.எம்:
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக வராமலேயே பலன்களை பெறுவதற்காகவும், ஊழியர்களின் சுமையை குறைப்பதற்காகவும் ஏ.டி.எம் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்பட்டது.
இலவச எண்ணிக்கை கட்டுப்பாடு:
இது வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மட்டுமின்றி, பாதுகாப்பானதாகவும் அமைந்தது. பின்னர், இந்நிலையில், பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்த ரூபாய் 20 செலவாகிறது என்பதற்காக ரிசர்வ் வங்கி பரிந்துரைப்படி இலவச எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
200 ரூபாய் செலவாம்:
ஆனால், வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக செல்லும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு வங்கிக்கு ரூபாய் 200 செலவாகிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உங்களுக்குதான் கஷ்டம்:
ஏ.டி.எம் கட்டணத்துக்கு பயந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கினால் வங்கிகளுக்குதான் கூடுதல் செலவு. அதோடு, வாடிக்கையாளர்களை சமாளிக்க கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
கவனிப்பீர்களா?:
இதற்கு பதிலாக குறைந்த பட்சம் அந்தந்த வங்கிகளில் மட்டும் இலவச பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் வங்கிக்கு செலவும் மிச்சமாகும், வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கவனிக்குமா வங்கிகள் துறை?
கருப்புப் பண முதலைகளைப் பிடிச்சு வசூலிங்க சார்!
நாட்டில் கருப்புப் பண முதலைகள் கோடி கோடியாக பல ஆயிரம் கோடியாக பன்னாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ளனர். அவர்களப் பிடித்து உள்ளே போட வழி இல்லை. ஆனால் பாவம் சம்பளத்திற்காகவும், சேர்த்து வைத்த பணத்தை எடுப்பதற்காகவும் வங்கிகளுக்குப் போகும் அப்பாவி மக்களைத்தான் பிடித்துப் பிழிகிறார்கள்.. இந்த லட்சணத்தில் எல்லோருக்கும் அக்கவுண்ட் வேறு ஆரம்பித்து தருகிறது மத்திய அரசு... !