எப்படி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு போகலாம்? அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவருக்கு மிரட்டல்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவரான இமாம் உமர் அகமது இலியாசிக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்திந்திய இமாம் அமைப்புகளின் தலைவரான இமாம் உமர் அகமத் இல்யாசி பங்கேற்றார். இந்நிலையில் தான் இமாம் உமர் அகமது இல்யாசிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உமர் அகமது இல்யாசி டெல்லி போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முப்தி கிளாசஸ் என்ற இன்ஸ்ட்டியூட் நடத்தி வரும் முக்பதி சபீர் உசைனியிடம் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இப்படி Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது இதுதான் முதல் முறையாகும். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications