பாஜகவுக்கு செம அடி... பாபர் மசூதி வழக்கிலிருந்து அத்வானி, உமாபாரதி,ஜோஷி விடுவிப்பு இல்லை!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான 12 பேரில் 11 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் அதை கோர்ட் தள்ளுபடி செய்தது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20000 பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், சதி திட்டத்தில் எதுவும் ஈடுபடவில்லை என்றும், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், அத்வானி, உமா பாரதி உட்பட 12 பேரில் 11 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை 2 வருடங்களுக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே அத்வானி உள்ளிட்டோர் கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்பட்டது. அதேபோல, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவர் மீதும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.