மே. வங்கம் முதல்கட்ட தேர்தல்.. 2016இல் மொத்தமாக அள்ளிய திரிணாமுல்.. இம்முறை கஷ்டம்தான், காரணம் என்ன
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் 26இல் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை சவாலான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் எட்டு கட்டகங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 73 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலப்பரப்படி 36.09%, வாக்குள் பதிவாகியுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை தற்போது அரசியல் களம் திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக என்று மாறியுள்ளது. தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மட்டும் போட்டி நிலவுகிறது. ஒரு காலத்தில் மாநிலத்தில் மிகவும் வலுவாக இருந்த இடதுசாரிகள்-காங்கிரஸ் மிக மோசமாக மூன்றாம் இடத்தை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

30 தொகுதிகள்
இன்று தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் 29 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் சுயேட்சைக்குத் தனது ஆதரவைக் கொடுத்துள்ளது. அதேபோல பாஜகவும் 29 தொகுதிகளில் களமிறங்குகிறது. ஒரு தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது. இதில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் இடதுசாரிகள் 18 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

26இல் வென்ற திரிணாமுல்
இன்று தேர்தல் நடைபெறும் ஜங்கல்மஹால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை இடதுசாரிகளே வலுவாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. 'மாற்றம் தேவை' என்ற முழக்கத்துடன் 2011ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட மம்தா இப்பகுதியில் பெரும்பாலான தொகுதியில் வென்றார். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் 26இல் கடந்த 2016ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருந்தது.

மோடி அலை
ஆனால், அதன் பின்னர் மூன்று ஆண்டுகளில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பிரதமர் மோடிக்கு இப்பகுதியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பழங்குடியினர் அதிகம்
மேலும், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். இவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இங்கு வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். இதனால் இந்த வாக்காளர்களைக் கவரும் நடவடிக்கைகளிலும் இரண்டு கட்சியினரும் தீவிரமாகக் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர பிரசாரம்
கடந்த தேர்தலில் எளிதாக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த முறை அதே அளவு இடங்களைக் கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிமையானதாக இருக்காது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். இதன் காரணமாகவே காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் மம்தா பானர்ஜி தொடர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications