வெளியாட்கள் என சிலரை முத்திரை குத்தி... மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார்.... ஜே பி நட்டா பாய்ச்சல்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்திலுள்ள மக்களை மண்ணின் மைந்தர்கள் - வெளியாட்கள் என பிரித்து அரசியல் செய்கிறார் என்று பாஜக தலைவர் ஜே பி நட்டா விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸே ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக பணியாற்றி வருகிறது.
பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா எனப் பல முக்கிய தலைவர்களும் மேற்கு வங்கத்தில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
நட்டா பாய்ச்சல்
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசியலையே கிரிமினல் மயமாக்கிவிட்டது. அவர்கள் ஊழலை நிறுவன மயமாக்கிவிட்டனர். மாநில அரசு காவல்துறையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறது" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் நிச்சயம் தோல்வியடையும் என்றும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் பேசினார்.
பாதுகாக்க முடியும்
தொடர்ந்து பேசிய நட்டா, "மம்தா பானர்ஜியின் ஆட்சியில், மேற்கு வங்கத்தின் வளமான கலாசாரமும் பாரம்பரியமும் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இவற்றை பாஜகவால் மட்டுமே பாதுகாக்க முடியும். மாநிலத்திலுள்ள மக்களை மண்ணின் மைந்தர்கள் - வெளி மாநிலத்தவர் என்று பிரிப்பது வங்காளத்தின் உண்மையான கலாசாரம் இல்லை.
கலாசாரம் இதுவல்ல
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்திலுள்ள மக்களை வெளியாட்கள் என்று முத்திரை குத்துவதன் மூலம் சமூகத்தில் பகைமையைத் தூண்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் பிறந்த நிலத்தின் கலாசாரம் இது அல்ல" என்றும் அவர் கூறினார்.
மாற்றம் தரும் பாஜக
தொடர்ந்து மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசிய நட்டா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தாய், நிலம் மற்றும் மக்கள் என்ற முழக்கத்தைச் சர்வாதிகாரம், மிரட்டி பணம் பறித்தல், குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்துவது என மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் விமர்சித்தார். மேலும், பாஜகவால் மட்டுமே மேற்கு வங்க மாநிலத்திற்கு உண்மையான மாற்றத்தைத் தர முடியும் என்றும் அவர் கூறினார்.