எப்படி ஹெல்மெட் போடாமல் "காரில்" போகலாம்... பாஜக பிரமுகருக்கு ஃபைன் போட்ட பெங்களூரு போலீஸ்!
பெங்களூரு: காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பாஜக பிரமுகர் ஒருவருக்கு பெங்களூரு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரகாஷ். நேற்று முன் தினம் இவருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது.
அதில், அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடவே, கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தங்களது தவறை போக்குவரத்து அதிகாரிகள் உணர்ந்தனர். இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தவறு எந்திர கோளாறு காரணமாக நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது' என்றார்.
இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications