காணாமல் போய் லாலுவிடம் மீண்டும் 'திரும்பிய' 9 எம்.எல்.ஏக்கள்
பாட்னா: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை விட்டு விலகியதாக கூறப்பட்ட 13 எம்.எல்.ஏக்களில் 9 பேர் மீண்டும் லாலுவுடன் இணைந்துவிட்டனர்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் நேற்று திடீர் பிளவு ஏற்பட்டது. அக் கட்சியில் இருந்து விலகி விட்டதாக 13 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதம் சட்டசபை தலைவரிடம் அளிக்கப்பட்டது. மேலும் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அவர்களில் 5 பேர், கட்சியில் இருந்து தாங்கள் விலகவில்லை என்று மறுத்தனர். இந்த 5 எம்எல்ஏக்களும் நேற்று மாலை கட்சி அலுவலகத்துக்கு திடீரென சென்று நாங்கள் விலகவில்லையே என்று விளக்கம் அளித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏக்கள் 5 பேரும், கட்சியில் இருந்து விலகிய கடிதத்தில் கையெழுத்திடவில்லை. இதில் மோசடி நடைபெற்றுள்ளது என்றும் குற்றம்சாட்டினர். சாம்ராட் சௌத்ரி எம்.எல்.ஏ.தான் சதி செய்து தங்களது பெயரை சேர்த்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இன்று மேலும் 4 எம்.எல்.ஏக்கள் லாலுவின் பாசறைக்கே திரும்பிவிட்டனர். தமது 9 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக் கொண்டு சபாநாயகர் முன்பு அணிவகுப்பு நடத்த லாலு பிரசாத் யாதவ் முயற்சித்தார். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பீகார் சட்டசபை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications