பீகார் ஆளுநரை சந்தித்தார் மஞ்சி! சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை!!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும் ஜிதன்ராம் மஞ்சி இன்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்தார். அப்போது சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிப்பேன் என்றும் ஆளுநரிடம் மஞ்சி கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் பிரசாரம் நிதிஷ்குமார் தலைமையில் நடந்தால்தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சிக்குள் கருத்து வலுவடைந்துள்ளது.

70 வயதான மஞ்சியோ முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார். அத்துடன் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சட்டசபையைக் கலைக்கவும் முதல்வர் மஞ்சி பரிந்துரை செய்தார்.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனிடையே அதிரடியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று மஞ்சி நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமாரும் ஆளுநர் கேசரிநாத்தை 130 எம்.எல்.ஏக்களுடன் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத்தை மஞ்சியும் சந்தித்தார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது அரசியல் சாசன விரோதமாகும்.
நான் தற்போதும் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தலம் தலைவர்தான். சட்டசபையில் தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதனால்தான் ஆளுநரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications