லாலுவின் மூத்தமகன் வெற்றி... 2வது மகன் தொடர்ந்து முன்னிலை!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார், மற்றொருவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பீகாரில் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்தன.
இதில், வைஷாலி மாவட்டத்தின் 2 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரஹ்கோபூர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் 1995,2000ஆம் ஆண்டுகளில் லாலுவும், 2005 பிப்ரவரி, 2005 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவியும் வெற்றி பெற்றிருந்தனர். இது லாலுவின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது.
இதேபோல், லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தேஜ்பிரதாப் மற்றும் தேஜஸ்வி இருவரும் ஆரம்பத்தில் சற்று பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். பின்னர் அதிரடியாக முன்னணிக்கு வந்தனர்.
தற்போது லாலுவின் மூத்த மகனான தேஜ்பிரதாப் யாதவ் தனது தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தன்னைத் தொடர்ந்து மனைவியை அரசியலில் இறக்கி முதல்வர் பதவியிலும் அமர வைத்த லாலு, இந்தத் தேர்தலில் தனது இரு மகன்களையும் களத்தில் இறக்கினார். இருவருக்கும் இதுதான் முதல் தேர்தலாகும். முதல் தேர்தலிலேயே வெற்றிக் கனியைப் பறித்து அப்பாவின் நம்பிக்கையை இருவரும் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாலு குடும்பத்தில் ஏற்கனவே அவரது மகள் மிசா பார்தி கடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து மகன்களை இந்தத் தேர்தல் மூலம் லாலு அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications