உ.பி., பீகாரில் பயங்கர வெள்ளம்.. 8 லட்சம் பேர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 149-ஆக உயர்வு
பாட்னா: வடமாநிலங்களில் வரலாறு காணாது பெய்து வரும் கனமழையால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பீகாரில் வெள்ளம் காரணமாக இந்தாண்டு மட்டும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

கனமழை காரணமாக உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாராணசி, அலாகாபாத், காஸிப்பூர், பலியா உள்பட 28 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 987 கிராமங்களைச் சேர்ந்த 8.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .
இதனிடேயே பீகாரிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி 14 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து, இதுவரை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications