கிட்னி செயல் இழப்பு.. லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் கண்காணிப்பு
ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (71 வயது), மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

4 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிட்னி செயல் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கிட்னி செயல்பாடு தற்போது 37 சதவிகிதம் குறைந்துள்ளதாக அவரை கண்காணித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடல் நிலை மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ள லாலு பிரசாத் யாதவ்வை மருத்துவர்கள் தீவிரமா கண்காணித்து சிகிக்சை அளித்து வருகிறார்கள். இது ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் எளிய மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக விளங்கும் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான் ரயில்வே துறை லாபகரமாக இயங்கியது.












Click it and Unblock the Notifications